கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது சோதனை சாவடியில் சிக்கினர்

கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரள சோதனைசாவடியில் அவர்கள் சிக்கினர்.

Update: 2018-02-20 20:30 GMT
செங்கோட்டை,

கேரளாவுக்கு கஞ்சா கடத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கேரள சோதனைசாவடியில் அவர்கள் சிக்கினர்.

போலீசார் துரத்திச் சென்றனர்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் கைகாட்டினர். அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றனர்.

உடனே போலீசார் அந்த நபர்களை துரத்திச் சென்றனர். அதற்குள் அந்த நபர்கள் கேரள மாநில எல்லைக்குள் சென்று விட்டனர். அங்குள்ள மதுவிலக்கு வாகன சோதனை சாவடியில் போலீசார், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கைகாட்டவே, அந்த நபர்கள் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினர். அப்போது நிலைதடுமாறி அங்குள்ள தடுப்பு கம்பியில் இருசக்கர வாகனம் மோதியது.

2 கல்லூரி மாணவர்கள்

பின்னர் தப்பி ஓட முயன்ற அந்த நபர்களை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 23), அபிநவ் நாயர் (25) ஆகியோர் என்பதும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாககேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்களையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்