இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி புதிய நீர்தேக்கத்தொட்டி கட்ட கோரிக்கை

கீழையூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்தேக்கத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-02-25 22:30 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பின்னர் திருமணங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் முழுவதும் சேதமடைந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த நீர்தேக்கத்தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

நடவடிக்கை

இந்த தொட்டிக்கு அருகே குளம் ஒன்றும், ரேஷன் கடையும் உள்ளது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த பகுதி வழியாக செல்பவர்கள் தொட்டி கீழே விழுந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே இந்த தொட்டியை இடித்து விட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்