கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதாக மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

Update: 2018-02-25 23:50 GMT
சாங்கிலி,

சாங்கிலியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கலப்பு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தற்போது சமுதாயத்தில் நடந்துவரும் மாற்றத்தை உணர்ந்துகொண்டு, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கலப்பு திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவேண்டும். சமூக ஒற்றுமையை வளர்க்கும் இதுபோன்ற திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு அம்பேத்கர் பவுண்டேசன் மூலம் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியை மத்திய அரசு அனுமதித்து உள்ளது. மேலும் மாநில அரசு கூடுதல் நிதியுதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர், “சாங்கிலி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடிசை பகுதிகளிலும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசிடம் பேசியுள்ளதாகவும்” கூறினார். 

மேலும் செய்திகள்