கடலூர் மீனவர்களின் தூண்டிலில் 250 கிலோ எடையுள்ள மயில் மீன் சிக்கியது

கடலூர் துறைமுக மீனவர்களின் தூண்டிலில் 250 கிலோ எடையுள்ள மயில் மீன் சிக்கியது.

Update: 2018-02-26 21:30 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து முதுநகர், சிங்காரதோப்பு, சோனாங்குப்பம், அக்கரைகோரி, சொத்திக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமாக மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பது வழக்கம்.

அந்தவகையில் நேற்று முன்தினம் கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட மீனவர்கள் பைபர் படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் சென்ற படகு தூண்டில் மூலம் மீன்பிடிக்கும் வகையை சேர்ந்தது. கடலூர் துறைமுகத்தில் இருந்து சுமார் 20 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, சுமார் 250 கிலோ எடை கொண்ட மயில் மீன் என்கிற எமிமீன் ஒன்று தூண்டிலில் சிக்கியது.

அதை பத்திரமாக நேற்று காலை அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இதை மிகுந்த ஆச்சரியத்துடன் துறைமுகத்தில் உள்ளவர்கள் பார்த்தனர். இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், எப்போதாவது 100 கிலோ எடை கொண்ட மயில் மீன் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த முறை 250 கிலோ எடை கொண்ட மீன் கிடைத்து இருக்கிறது.

இந்த மீனை வியாபாரி ஒருவர் ரூ.21 ஆயிரத்துக்கு வாங்கி சென்றார். இது தவிர 60 கிலோ எடை கொண்ட 2 சுங்கம் மற்றும் 10 கிலோ எடை கொண்ட 1 அரக்ககோலா வகை மீனும் கிடைத்துள்ளது என்றார்.

மேலும் செய்திகள்