பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த வியாபாரி சாவுக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணை

திருவட்டார் அருகே பூட்டிய வீட்டின் உள்ளே வியாபாரி பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-02-26 22:15 GMT
திருவட்டார்,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 67). இவர் குமரி மாவட்டம் திருவட்டார் அருகே பூவன்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் திருவட்டார் பகுதியில் இருந்து முந்திரி பருப்புகளை மொத்தமாக வாங்கி பல்வேறு கடைகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் அனுப்பி வியாபாரம் செய்து வந்தார். இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் மட்டும் திருவட்டாரில் தனியாக தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு விநாயகம் தான் தங்கியிருந்த வீட்டில் தூங்க சென்றார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால், உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தன.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, விநாயகம் வீட்டின் உள்ளே பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விநாயகம் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்