ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் 7-வது நாளாக நீடிப்பு

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்தம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.

Update: 2018-03-08 22:45 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இவர்கள் முதல் நாள் கடலுக்கு சென்று அடுத்தநாள் திரும்பி விடுவார்கள். ஆனால், காரைக்கால் மீனவர்கள், கடல் பகுதியில் தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் வரை படகுகளிலேயே தங்கியிருந்து மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தினசரி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த மீன்வளத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் கடலுக்கு சென்று மீன்பிடிக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7-வது நாளாக நீடிப்பு

இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதனால், மீன்பிடித்தளத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்