மாசி மாத 4-வது வியாழக்கிழமையையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம்

மாசி மாத 4-வது வியாழக்கிழமையையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2018-03-08 22:30 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் மாசிமகா குருவார தரிசன விழா கடந்த 1-ந் தேதி நடைபெற்றது.

மாசி 4-வது வியாழக்கிழமையையொட்டி நேற்று 1,008 சங்காபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஹோமம், மதியம் 1 மணிக்கு அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பூர்ணாஹுதி, மதியம் 2 மணிக்கு குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஹோமத்தில் புனிதநீர் நிரப்பட்ட சங்குகள் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஜோதிராமலிங்க சிவாச்சாரியார், ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை சொல்லி ஹோமத்தை நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்