சீனிவாசப்பூர் தாலுகாவில் இளம்பெண் கற்பழிப்பு; தொழிலாளி கைது

சீனிவாசப்பூர் தாலுகாவில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை கற்பழித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-08 23:22 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா தோடமளதொட்டி கிராமத்தில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அஜித்(வயது24) என்ற கூலித்தொழிலாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

பின்னர் அவர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தைக்கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த அஜித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சீனிவாசப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மசலஹள்ளி கிராமத்தில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த கங்காதர்(21) என்ற வாலிபர் கற்பழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்