ஆட்டோ டிரைவரின் பள்ளிக்கூடம்

ஆட்டோ டிரைவர் ஒருவர் ஏழைக் குழந்தைகளுக்கு தடையில்லா கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

Update: 2018-03-18 09:15 GMT
தன்னுடைய அயராத முயற்சியால் 9 பள்ளிக்கூடங்களையும் திறந்து விட்டார். வறுமையான வாழ்க்கை பின்னணியை கொண்டவர்களின் குழந்தைகள் இவர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் படித்துக்கொண்டிருக் கிறார்கள்.

அந்த ஆட்டோ டிரைவர் பெயர் அகமது அலி. இவர் அசாம் மாநிலத்திலுள்ள கரீம்கன்ஜ் மாவட்டத்தை சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அகமது அலியால் படிப்பை தொடரமுடியவில்லை. குடும்ப வறுமையை போக்க இளம் வயதிலேயே ஆட்டோ ஓட்டத் தொடங்கியிருக் கிறார். ஆனாலும் அவர் தன்னுடைய பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகளுடைய படிப்புக்கு வறுமை தடையாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக பள்ளிக்கூடம் ஒன்றை அமைக்க திட்டமிட்டவர், தன்னுடைய நிலத்தை விற்று கட்டுமான பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் போதுமான அளவு பணம் இல்லாததால் கட்டிடபணிகள் பாதியிலேயே நின்றுவிட்டன.

கிராமத்தினரை சந்தித்து நிதி உதவி கோரியிருக்கிறார். அவர்களும் அகமது அலியின் முயற்சியை பாராட்டி, நிதி உதவி அளித்திருக்கிறார்கள். கிராமத்தினரின் கூட்டு முயற்சியால் 1978-ம் ஆண்டு முதல் பள்ளிக்கூடத்தை தொடங்கினார். கிராம மக்களின் ஒத்துழைப்பும், அவர் களின் பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு காட்டிய ஆர்வமும் சுற்றுப்புற பகுதிகளில் மேலும் பல பள்ளிகளை தொடங்கும் எண்ணத்தை அகமது அலியிடம் விதைத்துவிட்டது. தற்போது அவருடைய முயற்சியால் மூன்று ஆரம்ப பள்ளிகள், 5 நடுநிலைப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி போன்றவை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக கல்லூரி தொடங்கும் முயற்சியில் அகமது அலி ஈடுபட்டு வருகிறார். ‘‘என்னுடைய பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். அதுதான் என் கனவு’’ என்கிறார்.

மேலும் செய்திகள்