அமாவாசை தினத்தில் கணவர் மீன் வாங்கி வந்ததால் தகராறு: காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

அமாவாசை தினத்தில் கணவர் மீன் வாங்கி வந்ததால் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-04-16 23:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி விரிவு பகுதி, வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 30). இருவரும் காதலித்து கடந்த 8 வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

அமாவாசை தினமான நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் வீட்டில் சமைப்பதற்காக மீன் வாங்கி வந்தார். இதனால் அவரது காதல் மனைவி வெண்ணிலா, “அமாவாசை தினத்தில் ஏன் மீன் வாங்கி வந்தீர்கள்?” என்று கேட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த வெண்ணிலா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், மனைவி உடலில் எரியும் தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

தீக்காயம் அடைந்த கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வெண்ணிலா, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்