வேலூர் கோட்டையில் மதுகுடித்து ஆட்டம் போடும் கல்லூரி மாணவிகள்

வேலூர் கோட்டையில் கல்லூரி மாணவிகள் மதுகுடித்து ஆட்டம் போடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-04-24 23:45 GMT
வேலூர்,

மதுகுடித்துவிட்டு பெண்கள் தள்ளாடும் போட்டோ, வீடியோக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அடிக்கடிவருவது வாடிக்கையாகி விட்டது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத்துறையிலும் காலூன்றி வரும் நிலையில் மதுகுடிப்பதில் அவர்கள் ஆண்களை மிஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மதுகுடிப்பதை ஒரு பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள். சமீபத்தில் பெண் போலீஸ் ஒருவர் தனது ஆண் நண்பருடன் மதுகுடித்துவிட்டு போதையில் தள்ளாடியது வைரலாக பரவியது. இந்த நிலையில் வேலூருக்கு பெருமை சேர்க்கும் கோட்டையில் கல்லூரி மாணவிகள் மதுகுடித்துவிட்டு ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாக பரவிவருகிறது.

அந்த வீடியோ காட்சியில், கோட்டை மதில்சுவர் நடைபாதையில் கல்லூரி மாணவிகள் 4 பேர் சிரித்தபடி நடனமாடுகின்றனர். அவர்களில் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை டி-சர்ட் அணிந்த ஒரு மாணவி, கையில் பீர் பாட்டில் இருக்கிறது. அவர் பீர் பாட்டில் மூடியை பற்களால் கடித்து திறக்கிறார்.

பிறகு, பாட்டிலை வாயில் வைத்து பீரை குடிக்கிறார். அதை ஒரு மாணவி செல்போனில் வீடியோ எடுக்கிறார். பீரை குடிக்கும் அந்த மாணவி, செல்போனில் வீடியோ எடுக்கும் தனது சக தோழியை பார்த்து, ‘எதுக்குடி வீடியோ எடுக்குற?’ என்று கேட்கிறார். அதற்கு வீடியோ எடுத்த மாணவி, ‘சும்மா தான் எடுக்கிறேன்‘ என்கிறார்.

அதற்கு ‘அடியே அதை யாருக்காவது அனுப்பிட போற, ஜாக்கிரதை’ என்று பீர் குடித்த மாணவி கூறுகிறார். ‘யாருக்கும் அனுப்ப மாட்டேன்’ என்று கூறும் வீடியோ எடுத்த மாணவி, தொடர்ந்து வீடியோ எடுக்கிறார். அதற்கு மற்ற 3 மாணவிகளும் ஒன்றாக சேர்ந்து பீர் பாட்டிலை மாறி, மாறி வாங்கி பீர் குடித்தபடி வீடியோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். பீரை குடித்து முடித்ததும் மாணவிகள், போதையில் கும்மாளமிடுகின்றனர்.

அப்போது, கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள், பீர் பாட்டிலுடன் போதையில் ஆட்டம் போட்ட மாணவிகளை பார்த்து முகம் சுளித்தனர். வேலூர் கோட்டையை சுற்றிப்பார்க்கவருபவர்களை கண்காணிக்க கோட்டை மதில்சுவர் நடைபாதைக்கு செல்லும் வழியில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி கல்லூரி மாணவிகள் சென்று பீர்குடித்து கும்மாளமிட்ட இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்