நீட் தேர்வு எழுத மகனை அழைத்து சென்றபோது மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு, வைகோ ஆறுதல்

நீட் தேர்வு எழுத மகனை அழைத்து சென்றபோது மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் கூறினார்.

Update: 2018-05-12 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது47). இவர் பெருகவாழ்ந்தானில் உள்ள அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வந்தார். நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் கிருஷ்ணசாமி இறந்தார்.

அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விளக்குடி வந்தார். அப்போது அவர் கிருஷ்ணசாமியின் மனைவி பாரதிமகாதேவி, மகள் ஐஸ்வர்யா மகாதேவி, மகன் கஸ்தூரிமகாலிங்கம் மற்றும் உறவினர் களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு தமிழ்நாட்டை பழி வாங்குகிறது. மாநில அரசும் அதை வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் தேர்வு எழுத போதிய இடவசதி இருக்கும் போது தமிழக மாணவர்களை ஏன் வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சி ஒழிந்ததால் தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு மத்திய அரசு என்ன பதில் செல்ல போகிறது?

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்