மங்களூரு, தார்வார், பெலகாவி பகுதிகளில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்கள்

மங்களூரு, தார்வார், பெலகாவி பகுதிகளில் மணக்கோலத்தில் வந்து மணப்பெண்கள் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை செய்தனர். திருமணத்தின்போதும் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்தனர்.

Update: 2018-05-12 22:15 GMT
பெங்களூரு, 

மங்களூரு, தார்வார், பெலகாவி பகுதிகளில் மணக்கோலத்தில் வந்து மணப்பெண்கள் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை செய்தனர். திருமணத்தின்போதும் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்தனர்.

மணக்கோலத்தில்...

ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். அதுபோல் நேற்று கர்நாடக தேர்தலுக்கான ஓட்டுப்பதிவின்போது குடகு மாவட்டம் மடிகேரி அருகே காண்டனகொள்ளி கிராமத்தில் ஒரு இளம்பெண் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தார்.

பின்னர் அவர் திருமண மண்டபத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டார். அதேபோல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே போந்தல் பகுதியில் ஒரு மணப்பெண் மணக்கோலத்தில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அவருடைய பெயர் வியோலா பெர்னாண்டஸ் ஆகும். கிறிஸ்தவரான அவர் மணப்பெண் அலங்காரத்துடன் வந்து போந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு, பின்னர் பெல்தங்கடியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.

ஓட்டுப்போட்டனர்

அதேபோல் பெலகாவியிலும், தார்வாரிலும் புதுமணத்தம்பதி திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர். தார்வார் டவுன் பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜூன் மற்றும் நிகிதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நிச்சயித்தபடி நேற்று காலையில் அவர்களுடைய திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மல்லிகார்ஜூன், நிகிதா தம்பதி மணக்கோலத்துடன் காமகட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர்.

பெலகாவியில் தனது திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த புதுப்பெண் மானவி தாசில்தார், தனது ஓட்டை பதிவு செய்தார்.

மணப்பெண்கள் திருமண நேரத்தில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை செய்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. மேலும் அந்த பெண்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்