கார் டயர் வெடித்ததால் சாலையில் குழந்தையுடன் தவித்த பெண்கள் உதவி செய்த போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு

பனப்பாக்கம் அருகே கார் டயர் வெடித்ததால் சாலையில் குழந்தையுடன் பெண்கள் தவித்தனர்.

Update: 2018-05-12 22:23 GMT
பனப்பாக்கம்,

வேலூரில் இருந்து காஞ்சீபுரத்துக்கு நேற்று 2 பெண்கள் குழந்தையுடன் காரில் சென்றனர். காரை 2 பெண்களில் ஒருவரின் கணவர் ஓட்டினார். கார் மதியம் 12 மணியளவில் வேலூர் மாவட்ட எல்லையான பனப்பாக்கம் அருகே உள்ள சங்கரன்பாடிசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது.

அதனால் நிலை தடுமாறிய காரை டிரைவர் சாமர்த்தியமாக சாலையோரம் நிறுத்தினார். பின்னர் அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கி பார்த்தனர். காரின் முன்பக்க டயர் வெடித்து இருப்பது தெரிந்தது. காரை ஓட்டி வந்தவருக்கு டயரை கழற்றி மாற்ற தெரியாது. ஆனாலும் அவர் டயரை கழற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். காரில் இருந்த 2 பெண்களும் குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் சாலையில் நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் உதவி செய்தனர்

அப்போது அந்த வழியாக வேலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்களின் வாகனம் சென்றது. காரின் அருகே 2 பெண்கள் குழந்தையுடன் நிற்பதை கண்ட போலீஸ்காரர்கள் உடனடியாக தாங்கள் சென்ற வாகனத்தை நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ்காரர்கள் ராஜேஷ்கண்ணா, சின்னசாமி, ராதாகிருஷ்ணன் உள்பட 8 பேர் உடனடியாக வெடித்த காரின் டயரை கழற்றினார்கள். பின்னர் காரின் பின்பகுதியில் இருந்த மற்றொரு டயரை விரைவாக மாற்றி கொடுத்தனர். தொடர்ந்து பத்திரமாக செல்லும்படி கூறினர்.

பொதுமக்கள் பாராட்டு

அதற்கு அந்த பெண்கள் நீண்ட நேரமாக கொளுத்தும் வெயிலில் கையில் குழந்தையுடன் சாலையில் நின்று கொண்டிருந்தோம். ஆனால் யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. வெயில் காரண மாக குழந்தைகள் கதறி அழுதன. காக்கி உடையில் வந்த நீங்கள் கடவுள் போல எங்களுக்கு உதவி செய்து உள்ளர்கள் என்று அந்த பெண்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து போலீசாரை கைகுலுக்கி வாழ்த்து மற்றும் பாராட்டுகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்