அபூர்வ தகவல்களைத் தரும் ஆல்பங்கள்

சமூகத்திற்கு பயன்படும் என்ற எண்ணத்தில் பலரும் பலவிதமான பொருட்களை சேகரித்து வைக் கிறார்கள். அவற்றுள் சிலவற்றை பொக்கிஷமாக பாதுகாப்பார்கள். அவை பலருக்கும் பயன்படும் தகவல் பெட்டகமாகவும் அமைந்திருக்கும்.

Update: 2018-05-13 10:01 GMT
தபால் தலைகள், பழைய நாணயங்கள், பொம்மைகள், பதக்கங்கள், பண்டைய கலைப்பொருட்கள், இசை பதிவுகள், பயணத்தின்போது வாங்கிய பொருட்கள், மனதுக்கு பிடித்தமானவர்கள் பரிசளித்த பொருட்கள் போன்றவற்றை நிறைய பேர் சேகரித்து பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். வினோதமான பொருட்களை சேகரிக்கும் ஆர்வலர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் சமூகத்திற்கு பலனளிக்கும் விதத்தில் ‘தினத்தந்தி' செய்தித்தாளை சேகரித்து வருகிறார், ஜெயச்சந்திரன். இவர், விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினத்தந்தி நாளிதழ்களை சேகரித்து அதனை ஆல்பமாக உருவாக்கி பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுகிறார். அருப்புக்கோட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு ‘தினத்தந்தி ஆல்பமே’ தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. செய்தி ஆல்பம் மூலம் தான் பிரபலமானது பற்றி அவர் சொல்கிறார்:

‘‘எனது பூர்வீகம் வெம்பக்கோட்டையை அடுத்த தொம்பக்குளம். எனது பெற்றோர் பொன்னுநாயக்கர்-பொன்னுத்தாயம்மாள். 6-ம் வகுப்பு படித்தபோது எனது நண்பர்களான சுப்புராம், கனகராஜ் ஆகியோருடன் சேர்ந்து நூலகம் மற்றும் டீக்கடைகளில் தினமும் தினத்தந்தி படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம். அதில் கன்னித்தீவு எங்களை அதிகம் கவர்ந்தது. படங்களும் எங்களை ஈர்க்கிறது.

படித்த செய்தித்தாளை சேகரித்து வைக்கும் பழக்கத்தை என்னுடைய தாயார் பொன்னுத்தாயம்மாளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். நான் சிறுவனாக இருந்தபோது அவர் வார இதழ்களை வாங்கி அவற்றில் வரும் தொடர்கதைகள், சுவாரசியமாக தகவல்களை விரும்பி படிப்பார். பின்னர் அந்த புத்தகங்களை அரிசி சேமித்து வைக்கும் பெரிய மண்பானைகளில் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். அவரை பின்பற்றி நானும் சிறுவயதில் இருந்தே நாளிதழ்களை சேகரித்து வைக்கும் வழக்கத்தை கடைப்பிடித்தேன். அதனால் கிடைத்த நன்மைகள் ஏராளம். நாளிதழ்களில் அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக வெளியிடுகிறார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து அந்த நிகழ்வுகள் வரலாற்றுத்தகவல்களாக பேசப்படும்.

செய்தித்தாள்களை வெகுகாலம் கழித்து புரட்டிப்பார்த்தால் பலவிதமான செய்திகள் பல்வேறு கோணங்களில் நமக்கு நல்ல பல தகவல்களை கொடுக்கும். அந்த வகையில் தினத்தந்தி செய்தித்தாளை நாள்தோறும் வாங்கி படிப்பது மட்டுமல்லாமல் அதை பத்திரப்படுத்தியும்வைத்தேன். பணி நிமித்தம் காரணமாக இடையே செய்தித்தாள் சேகரிப்பில் சிரமம் எழுந்தது. 2010-ம் ஆண்டுக்கு முன்பு சேகரித்தவற்றை எல்லாம் ஒருகட்டத்தில் இழக்கவும் நேர்ந்தது’’ என்று வேதனையோடு சொல்கிறார்.

ஜெயச்சந்திரன், பணி ஓய்வுக்கு பின்னர் செய்தித்தாள் சேகரிப்பில் முழு மூச்சாக ஈடுபட தொடங்கி இருக்கிறார். செய்திகளின் தன்மைக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தி பிரித்து அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் ஆல்பமாக தொகுத்திருக்கிறார்.

‘‘நான் பணி நிறைவு பெறும்போது விருது நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றினேன். 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் செய்தித்தாள் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டினேன். புதிய நடைமுறைகளை பின்பற்றி, தினத்தந்தி செய்திகளை தொகுப்பதில் தனி கவனம் செலுத்தினேன். அன்றாடம் புதிய புதிய தகவல்களை எடுத்துச் சொல்லும் `தினம் ஒரு தகவல்', வெளிநாட்டு செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல், சினிமா, கல்வி வேலைவாய்ப்பு, கட்டுரைகள், மாதிரி வினா-விடை என அன்றாடம் வெளிவரும் செய்தி களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வகை வகையாக பிரித்தேன். அவற்றை வெட்டி எடுத்து ஆல்பம் போல தனியாக பெரிய நோட்டில் ஒட்டி வைத்துள்ளேன். நீதிமன்றம் தொடர்பான செய்திகளையும் வெட்டி எடுத்து தனி நோட்டில் ஒட்டி பாதுகாக்கிறேன். அதில் போலீஸ் செய்திகளும் அடங்கும். பைல் டைப், பைண்டிங் டைப், பேஸ்ட் டைப் என்று 3 வகையாக செய்தி சேகரிப்பை வகைப்படுத்தியுள்ளேன்.

பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான செய்திகளை தன்னகத்தே கொண்டுள்ள தினத்தந்தியை செய்திகளின் சாரம்சத்திற்கு ஏற்ப வகைப் படுத்திவைத்துள்ளேன். ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட செய்திக்கும் தனித்தனி ஆல்பம் தயாரித்துள்ளேன். இந்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தினர் என்னை தொடர்பு கொண்டு, முக்கிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக நீதிமன்ற செய்திகள் அடங்கிய ஆல்பத்தை வாங்கிச்சென்றிருக்கிறார்கள். அவர்களது துறை ரீதியான சமீபத்திய செய்திகளை தெரிந்து கொள்ள அது பயன்படுகிறது. அதுபோல கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆல்பத்தையும் சிலர் வாங்கிச்சென்றுள்ளனர். என்னை நாடி வந்தால் பத்திரிகை செய்திகளை வாங்கி தங் களுக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் உருவாகிக்கொண்டு இருக்கிறது’’ என்று பெருமிதம் கொள்கிறார்.

ஜெயச்சந்திரனின் ஆல்பம் கண்காட்சியிலும் இடம்பெற்று அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.



‘‘நான் தினத்தந்தியில் வெளியான சிறந்த படங்களையும் ஆல்பமாக தொகுத்துள்ளேன். சமீபத்தில் அருப்புக்கோட்டையில் நடந்த புத்தக கண்காட்சியில் என்னுடைய ஆல்பங்களை காட்சிப்படுத்தினேன். கண்காட்சிக்கு வந்த அனைவரும் எனது ஆல்பங்களை பார்த்து வியந்தனர். எப்படி இந்த பணிகளை உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார்கள். நிறைய பேர் தங்களுக்கு தகவல் தேவைப்படும்போது தொடர்பு கொள்கிறோம் என்று கூறி எனது செல்போன் எண்ணையும் வாங்கி சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய இந்த பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே சந்தோஷப்படுகிறேன். இது என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உத்வேகம் அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் நான் சேகரித்த தினத்தந்தி செய்தி ஆல்பங்களை எடுத்துச்சென்று மாணவ-மாணவிகளிடம் பொது அறிவு விஷயங்களை புகுத்த முடிவு செய்துள்ளேன். அவர்களுக்குள் செய்தித்தாள்களை படிக்கும், சேகரித்து வைக்கும் பழக்கம் உருவாக வேண்டும், அதற்கு என்னால் முடிந்த உந்துதலை முன்னெடுத்து செல்ல உள்ளேன்’’ என்கிறார்.

ஜெயச்சந்திரனின் மனைவி சுபாலட்சுமி திருச்சுழி ஒன்றியம் போத்தம்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மகள் லட்சுமிபிரியா என்ஜினீயரிங் முடித்துவிட்டு பி.எச்டி., ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். மகன் வருணன் என்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். 

மேலும் செய்திகள்