உணவுப் பொருட்களில் கலப்படத்தை தரம் அறிவது எப்படி? கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் விளக்கம்

உணவு பொருட்களில் கலப்படத்தை தரம் அறிவது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Update: 2018-05-14 22:30 GMT
கரூர்,

கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கோடைகால உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி உணவு பொருட்களின் தரம் பற்றி எப்படி அறிவது? என்பதை விளக்கும் வகையிலான அரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் மிளகு, மிளகாய்தூள், டீத்தூள், பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம், நல்லெண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டால் அதன் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றியும், தரமான பொருள் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இருவிதமாக பாட்டிலில் அடைத்து வைத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விளக்கு ஏற்றுவதற்கான நல்லெண்ணெய் என பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. தரமான மிளகு தண்ணீரில் மூழ்கி விடும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

வாட்ஸ்-அப்பில் புகார் தெரிவிக்கலாம்

இந்த அரங்கினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தரத்தை கண்டறிவது பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த முகாம் மே மாத இறுதி வரை நடக்கும். முகாமில் பொதுமக்கள் பார்வையிட்டு கோடை காலத்தில் பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உணவுப்பொருள் குறித்த பொதுமக்களின் புகார்களை நியமன அலுவலரின் 94440 42322 என்கிற வாட்ஸ்-அப் எண் வழியாக தெரிவித்தால் 24 மணி நேரத்தில் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் (பொறுப்பு) புஷ்பராஜ் மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்