அவுரங்காபாத் கலவரம்; வன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோவால் பரபரப்பு

வன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோவால் பரபரப்பு, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-05-14 22:20 GMT
அவுரங்காபாத்,

அவுரங்காபாத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது வன்முறையாளர்களுடன் போலீசார் உலாவும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளி யானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அவுரங்காபாத்தில் மோதி கரஞ்சா பகுதியில் உள்ள வழிபாட்டு தலத்தில் சம்பவத்தன்று சட்டவிரோத குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். குறிப்பிட்ட சிலரின் தூண்டுதலின் பேரிலேயே மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக கூறி ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே வன்முறை வெடித்தது. முதலில் மோதி கரஞ்சாவில் ஏற்பட்ட வன்முறை பின்னர் படிப்படியாக காந்தி நகர், ராஜா பஜார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது.

இந்த வன்முறையில் சுமார் 40 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த தீவைப்பு சம்பவத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 65 வயதான முதியவர் உடல்கருகி பலியானார். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயது வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வன்முறை தொடர்பாக இரு பிரிவையும் சேர்ந்த 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டுக்காக சம்பந்தப்பட்ட இடங்களில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வன்முறையாளர்கள் சிலருடன் சேர்ந்து போலீசார் உலாவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோவில் போலீஸ் சீருடை அணிந்த சிலர் வன்முறையாளர்கள் கடைகளுக்கு தீவைப்பதை வேடிக்கை பார்ப்பது போன்றும், அவர்களுடன் நடந்து செல்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. பிபின் பிஹாரி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் போலீசார் யாருக்காவது வன்முறையில் தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க்கப்படும்’ என தெரிவித்தார்.

இதற்கிடையே பா.ஜனதா வின் கூட்டணி கட்சியான சிவசேனா அவுரங்காபாத் வன்முறை சம்பவம் திட்ட மிட்டு நிகழ்த்தப்பட்டதாக தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் பரபரப்பு குற்றம்சாட்டியது. பீமா-கோரேகாவ் வன்முறை, அகமத்நகரில் அரசியல் பிரமுகர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டிய சிவசேனா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சகம் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறியது.

இந்தநிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல்(காங்கிரஸ்), அவுரங்காபாத் வன்முறைக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வலியுறுத்தி உள்ளார். மேலும் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்