தமிழகத்தை பாலைவனமாக்கக்கூடாது என்று கூறி கலெக்டர் அலுவலகம் முற்றுகை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 29 பேர் கைது

தமிழகத்தை பாலைவனமாக ஆக்கிவிடக்கூடாது என்று கூறி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-14 23:00 GMT

தேனி,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் மாவட்ட துணைச் செயலாளர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஆற்றுமணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

இதையடுத்து முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில துணைச் செயலாளர் பாரதி உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்