கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் நேற்று ஜமாபந்தி நடந்தது.

Update: 2018-05-15 21:30 GMT

ஓட்டப்பிடாரம், 

கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகங்களில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்திக்கு துணை கலெக்டர்(பயிற்சி) லாவண்யா தலைமை தாங்கினார். இதில் எப்போதும்வென்றான் குறுவட்டத்தை சேர்ந்த வாலசமுத்திரம், சிந்தலக்கட்டை, கே.சண்முகபுரம், குமாரபுரம், எப்போதும்வென்றான், ஜெகவீரபாண்டியபுரம், காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். இதில் 84 பேர் மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்பு தாசில்தார் ஞானராஜ், மண்டல துணை தாசில்தார் ஆனந்த் பிரபாகர், தலைமையிடத்து துணை தாசில்தார் சுசிலா, வட்ட வழங்கல் அலுவலர் வெள்ளத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று(புதன்கிழமை) சந்திரகிரி, ஆதனூர், கொல்லம்பருப்பு, கச்சேரிதளவாய்புரம், முள்ளூர், முத்துகுமாரபுரம் மற்றும் மணியாச்சி குறுவட்டத்தை சேர்ந்த சவரிமங்கலம், மேலப்பாண்டியாபுரம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலையில் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் கழுகுமலை உள்வட்டம் ஜமீன் தேவர்குளம், கே.வெங்கடேசபுரம், வில்லிசேரி, இடைசெவல், கழுகுமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை தியாகராஜன் பெற்றுக்கொண்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன், சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் ராஜ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கணேசன், நத்தம் தாசில்தார் மல்லிகா, கயத்தாறு பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் முருகானந்தம், சர்வே ஆய்வாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தி வருகிற 22–ந்தேதி வரை நடக்க உள்ளது.

மேலும் செய்திகள்