மொபட் மீது கார் மோதல்; கணவன்-மனைவி பலி

பர்கூரில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியானார்கள்.

Update: 2018-05-15 22:15 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சத்தலப்பள்ளியைச் சேர்ந்தவர் மாதையன் (வயது 63). இவரது மனைவி ஆனந்தவள்ளி (57), ஜவுளி வியாபாரிகள். கணவன்-மனைவி 2 பேரும் மொபட்டில் கிராமம், கிராமமாக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று மொபட்டில் பர்கூரில் இருந்து சென்னை பைபாஸ் செல்லும் சாலையின் ஒரு வளைவு அருகில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரம் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்த கார் அவர்கள் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் சென்ற மாதையன், அவரது மனைவி ஆனந்தவள்ளி ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் மாதையன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பரிதாப சாவு

விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தவள்ளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார், மாவட்ட தனிப்பிரிவு ஏட்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று இறந்த மாதையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மொபட் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்