கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் கலெக்டர் தகவல்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2018-05-15 22:45 GMT
கரூர்,

கரூரில் உள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் பலர் வருகை தந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி வழிபாடுசெய்கின்றனர். எனவே திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது மற்றும் பாதுகாப்பினை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

பக்தர்கள் குளிக்க செயற்கை நீரூற்றுகள்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியபோது கூறியதாவது:-

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு எடுத்துச்செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வருகிற 28, 29, மற்றும் 30-ந் தேதி ஆகிய மூன்று நாட்கள் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்து செல்வர். எனவே கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் பகுதி, ஆற்றில் கம்பம் விடும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குளிப்பதற்கு செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்கும், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் தொட்டிகள் தற்காலிகமாக அமைப்பதற்கும் தேவையான இடங்களில் தற்காலிக கழிவறைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் தற்காலிக மின்விளக்குகள், சாலையோரங்களில் சவுக்கு மரங்களை கொண்ட தற்காலிக தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன. கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுபவர்களால் கொண்டு வரப்படும் வேப்பந்தழைகள், நாணல்கள் ஆகியவற்றை நகராட்சி லாரிகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தேவையான அளவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், போக்குவரத்து வழித்தடத்தை மாற்றி அமைப்பதற்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, கோவில் அறங்காவலர் முத்துகருப்பன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்