காயல்பட்டினம் நகரசபையில் நுண் உரம் செயலாக்க மையம் தொடக்கம் கிலோ ரூ.10–க்கு விற்பனை

காயல்பட்டினம் நகரசபையில் நுண்உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் தயார் செய்யப்படும் உரம் கிலோ ரூ.10–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2018-05-17 20:30 GMT

ஆறுமுகநேரி, 

காயல்பட்டினம் நகரசபையில் நுண்உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் தயார் செய்யப்படும் உரம் கிலோ ரூ.10–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நுண்உரம் செயலாக்க மையம்

காயல்பட்டி நகரசபை சார்பில் நகரில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான உரம் தயாரிக்கும் நுண்உரம் செயலாக்க மையம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகரசபைக்கு உட்பட்ட 18–வது வார்டு சிவன் கோவில் தெருவில் சுண்ணாம்புக்கல் வலசை பகுதியில் அமைக்கப்பட்டது.

நகரில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு செயலாக்கம் செய்யப்படுகிறது. பின்னர் 2 மாதங்களில் விவசாயத்துக்கு தேவையான உரமாகிறது. இவ்வாறு பெறப்படும் உரம் நகரசபை சார்பில் கிலோ ரூ.10–க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரம் அறிமுகம் மற்றும் விற்பனை செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காயல்பட்டினம் அம்மா உணவக வளாகத்தில் நடந்தது. நகரசபை சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ் தலைமை தாங்கினார்.

நகர்நல பணிகள்

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, ‘ ஒரு கிலோ உரம் ரூ.10–க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த உரம் தேவைப்படுபவர்கள் நகரசபையில் பணம் செலுத்தி மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்று கொள்ளலாம். இதன் மூலம் பெறப்படும் வருமானம் நகர்நல பணிகளுக்கு பயன்படுத்தப்படும்’ என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டினத்தில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்