பிரபல ரவுடி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

ஓசூர் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-19 22:45 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி பக்கமுள்ளது ஒட்டர்பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்ன தாசப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ் (வயது 32). பிரபல ரவுடி. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட மொத்தம் 3 கொலை வழக்குகள் உள்ளன. இவர் சூளகிரி அருகே அட்டகுறுக்கியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் கம்பெனியில், வேலை செய்து வந்தார்.

கடந்த 17-ந் தேதி இரவு வெங்கட்ராஜ் காமன்தொட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கிரானைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வெங்கட்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த கேசவன் (26), அவரது தம்பி சந்தோஷ் (23), கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லைச் சேர்ந்த பாலாஜி (25), சூளகிரி ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த எர்ர முனியப்பா என்பவரின் மகன் மாதேஸ்வரன் (27), அவரது சகோதரர் மல்லே கவுடு ஆகிய 5 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இதில் கேசவன், அவரது தம்பி சந்தோஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரையும் சூளகிரி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலாஜி, மல்லேகவுடு ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்