மழைக்காக ஒதுங்கியபோது வேருடன் மரம் சாய்ந்ததில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

வேலூர், காட்பாடியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. காட்பாடி அருகே மழைக்காக ஒதுங்கியபோது வேருடன் மரம் சாய்ந்து விழுந்ததில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலியானார்.

Update: 2018-05-19 23:19 GMT
காட்பாடி,

தமிழகத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் மாவட்டங்களில் முன்னிலை வகிக்கும் மாவட்டமாக வேலூர் உள்ளது. அந்த அளவுக்கு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் வேலூரில் அதிகமாக இருக்கும். கோடை வெயில் வேலூர் வாசிகளுக்கு பழகிப்போன ஒன்றாகும்.

கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலில் இருந்து தப்பிக்க பலர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். சிலர் மலைப் பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்று விடுகிறார்கள். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் குளிர்பானங்கள், பழங்கள், பழச்சாறு ஆகியவற்றை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

வெயிலின் கொடுமையை தவிர்க்க மழை பெய்யாதா என மக்கள் ஏக்கத்துடன் இருந்தனர். இந்த நிலையில் நேற்று பகலில் வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயில் 104.5 டிகிரியாக பதிவானது. மாலை, வானத்தில் மேக மூட்டங்கள் சூழ்ந்து இருந்தன. மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. இந்த நிலையில், மாலை 4.45 மணிளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல அதிகமாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர். நகர வீதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பரத் தட்டிகள், விளம்பர பலகைகள், சாலையின் நடுவே வைத்திருந்த இரும்பு தடுப்புகள் கீழே விழுந்தன. மழை மாலை 6 மணி வரை நீடித்தது.

ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை பகுதியில் சாலை ஓரம் இருந்த ஒரு மரத்தின் கிளை முறிந்து மின் வயர் மீது விழுந்து சாலையின் நடுவே தொங்கியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மேலும் காகிதப்பட்டறை மற்றும் வேலூர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையம் அருகே காவலர் குடியிருப்பில் உள்ள மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று மெல்ல ஊர்ந்து சென்றன. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.

சங்கரன்பாளையம், சேண்பாக்கம் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த மழையால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. கோடைவெயிலின் தாக்கத்துக்கு இந்த மழை வேலூருக்கு வரமாக அமைந்தது என்றே கூறலாம்.

காட்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் காட்பாடியை அடுத்த ஜாப்ராப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பட்டம்மாள் (வயது 70) என்பவர் மழைக்காக அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே ஒதுங்கினார். அவர் நின்றிருந்த இடத்தின் அருகில் மற்றொரு சுவர் தனியாக இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த சுவர் மீது அருகில் இருந்த ஒரு வேப்பமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த, சுவர் இடிந்து பட்டம்மாள் மீது விழுந்தது. இதில் சுவருக்கு அடியில் சிக்கி பட்டம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்