கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தனியார் பள்ளிகளில் கல்வி கற்க ஏற்பாடு - கலெக்டர் தகவல்

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தனியார் பள்ளிகளில் கல்வி கற்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-20 23:45 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்த்தல், கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டம் தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கும் பொருட்டு தொழிலாளர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளின் மூலம் கல்வியினை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியினை பயன்படுத்தி அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் பயிலும் திறமையான குழந்தைகளில் வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அந்தந்த பகுதிகளில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வி வழங்கப்படுகிறது. அத்துடன், அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயின்று அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் மாவட்டத்தில் 10 பேர் வீதம் தேர்வு செய்து மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூலம் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ரூ.15 ஆயிரம் மற்றும் பராமரிப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரமும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படும். எனவே கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் இதுகுறித்து தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தேனி தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ராஜ்குமார், துணை ஆய்வாளர் பஞ்சு, உதவி ஆய்வாளர் அறிவழகன் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்