நெல்லையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

zஊதிய உயர்வு வழங்க கோரி நெல்லையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-05-30 21:00 GMT

நெல்லை, 

ஊதிய உயர்வு வழங்க கோரி நெல்லையில் கிராமப்புற தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், குழந்தைகளின் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், காப்பீட்டு திட்ட தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் கூட்டு போராட்ட குழு நெல்லை மாவட்டம் சார்பில் கடந்த 22–ந் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கியது.

நேற்று 9–வது நாளாக போராட்டம் நீடித்தது. இதனால் கிராமப்புற தபால் அலுவலகங்களில் தபால்கள் தேங்கின. தபால் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஆர்ப்பாட்டம்

அனைத்து இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். பாட்ஷா முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ஞானபாலசிங் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் பெரியதுரை, நம்பி, லட்சுமணன், சின்னத்தம்பி, செல்வம், சாகுல், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்