ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் விசைப்படகுகள்

தடை காலம் முடிவடைய உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றன.

Update: 2018-05-30 22:00 GMT

ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய 2 வாரகாலம் உள்ளது. இதையடுத்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் விசைப் படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகள் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விசைப்படகுகளுக்கு புதிதாக வர்ணம் அடித்தும் பதிவு எண்களை எழுதியும் படகுகளை கடலில் இறக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட தொடங்கி விட்டனர்.

இது பற்றி ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது:– விசைப் படகுகளுக்கான 61 நாட்கள் மீன் பிடி தடை காலம் வருகிற ஜூன் மாதம் 14–ந் தேதி அன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

15–ந் தேதி விசைப்படகு மீனவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை நாளாகும். அதனால் வருகிற ஜூன் மாதம் 16–ந் தேதி முதல் ராமேசுவரத்தில் இருந்து விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்பிடி டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்