புளியந்தோப்பில் கோஷ்டி மோதலில் முதியவர் வெட்டிக்கொலை

புளியந்தோப்பில் கோஷ்டி மோதலில் முதியவரை வெட்டிக்கொலை செய்த பிரபல ரவுடி மற்றும் அவருடைய கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-06-05 22:45 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராதா (வயது 63). இவருடைய மனைவி கற்பகம் (58). இவர்களுக்கு சம்பத் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பத் சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை, ராதா தனது வீட்டுக்கு அருகே உள்ள டீ கடைக்கு வந்தார். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட மர்மகும்பல் ராதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, தப்பிச்சென்றனர். இதில் ராதா, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜெஸ்வி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

முதல் கட்ட விசாரணையில் ராதாவை கொலை செய்தது பிரபல ரவுடியும், 7 கொலை வழக்குகளில் தொடர்புடையவருமான ஆற்காடு சுரேஷ்(45) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது.

பிரபல ரவுடி சின்னா என்ற சின்னகேசவன் மற்றும் வக்கீல் பகத்சிங் ஆகிய 2 பேரை ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2010-ம் ஆண்டு பூந்தமல்லியில் வெட்டிக்கொலை செய்தனர்.

அதன் பிறகு சின்னா கோஷ்டியை சேர்ந்தவர்கள் யாரும் புளியந்தோப்பு பகுதியில் இருக்ககூடாது என்று ஆற்காடு சுரேஷ் எச்சரித்ததை தொடர்ந்து சின்னா கூட்டாளிகள் அனைவரும் வெளியே சென்று விட்டனர். ஆனால் சின்னாவிற்கு பல வருடங்களாக கணக்கு பிள்ளையாக இருந்த ராதா மட்டும் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்தார்.

ஆற்காடு சுரேஷ் தலைமறைவாக இருந்தாலும் அவ்வப்போது புளியந்தோப்புக்கு வந்து மாமூல் பணத்தை வசூல்செய்வது, கூட்டாளிகளுக்கு திட்டம் தீட்டி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

சின்னா இறந்தபிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்த ராதா, ஆற்காடு சுரேஷ் புளியந்தோப்புக்கு வந்து செல்வது மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து, சின்னா கோஷ்டியினருக்கு தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அதே பகுதியில் வசித்து வரும் ஆற்காடு சுரேஷின் 2-வது மனைவி அஞ்சலை மற்றும் முதல் மனைவியின் மகன் எழில்(25) ஆகியோர் தட்டிகேட்டனர்.

இதனால் நேற்று முன்தினம் ராதாவுக்கும், எழிலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆற்காடு சுரேஷ், அஞ்சலை, எழில் ஆகியோர் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ராதாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தப்பி ஓடிய ஆற்காடு சுரேஷ் உள்பட 7 பேரும் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்