ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 13 பவுன் நகை- பணம் திருட்டு

தஞ்சை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 13 பவுன் நகை- பணத்தை 30 நிமிடத்திற்குள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-07 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி விக்டர் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது66). இவர் ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறையில் உதவி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி விஜயா. சம்பவத்தன்று நாகராஜ் வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் மாலை 5.30 மணி அளவில் விஜயா மாவு அரைப்பதற்காக வீட்டில் இருந்து அருகில் உள்ள மில்லுக்கு சென்றார். அப்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் பகுதியில் மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றார். பின்னர் 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.

நகை- பணம் திருட்டு

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தை கண்டு விஜயா அதிச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் விஜயாவை நோட்டமிட்டு, அவர் வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்ததை பார்த்து அவர் வெளியே சென்றதும் சாவியை எடுத்து பூட்டை திறந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

இது குறித்து விஜயா தனது கணவர் நாகராஜூக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

வலைவீச்சு

மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்