பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-06-07 21:00 GMT

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுபாட்டில்கள் திருட்டு

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நெல்லை–தென்காசி ரோட்டில் கே.டி.சி. நகர் பஸ் நிறுத்தம் பின்புறம் காட்டுப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனையாளர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க சென்றனர். அப்போது கடையின் முன்பக்க கேட் மற்றும் கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டும், அங்கு பொருத்தியிருந்த அலாரம் உடைக்கப்பட்டும் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் ராயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம். அவர்கள் மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக அப்படியே திருடி அவற்றை வேனில் ஏற்றி தப்பி சென்றுள்ளனர். திருட்டுப்போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 530 ஆகும்‘ என்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்