மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி, சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு

செம்பனார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார். மின்சார வாரியத்தை கண்டித்து நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-06-08 22:15 GMT
செம்பனார்கோவில்,

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் அமிர்தகணேஷ் (வயது 18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மேட்டிருப்பு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள அமிர்தகணேசின் உறவினர் வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி நின்றது. அதனை வெளியேற்ற அமிர்தகணேஷ் மாடிக்கு சென்றார். அப்போது மாடியில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியை கவனிக்காத அமிர்தகணேஷ் மீது மின்கம்பி உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அமிர்தகணேஷ் உடல் கருகி மாடியில் தேங்கி இருந்த மழைநீரில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தாழ்வாக சென்ற மின்கம்பியால் தான் அமிர்தகணேஷ் இறந்ததாக கூறி மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அமிர்தகணேசின் உடலை எடுக்க மறுத்து, மின்சார வாரியத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, தரங்கம்பாடி தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்