நூலகர் தேவை நிறைவேற்றப்படுமா?

ஒரு நூலகம் திறந்தால் நூறு சிறைச்சாலை கதவுகள் மூடப்படும் என்பது அறிஞர்களின் வாக்கு. அப்படிப்பட்ட நூலகம் மற்றும் நூலகரின் நிலைமை முரண்பாடுகளின் உருவமாக உள்ளது.

Update: 2018-06-09 05:13 GMT
தமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. இவற்றிற்கு உரிய கோட்பாடுகளுடன் நூலக கட்டிடம் உள்ளதா? என்றால் இல்லை. பெரும்பாலான நூலகங்களுக்கு நூலடுக்குகள் வைப்பதற்கே இடமில்லை. ஆண்டுதோறும் புத்தகங்கள் மட்டுமே வாங்கப்படுகிறது.

1,800 ஊர்ப்புற நூலகர்கள் அடிப்படை சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் பத்தாண்டுகளாக நீடிக்கிறது. பதவி உயர்வு இல்லாமலே மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பல மைல் தூரம் சென்று பணியாற்றி வருகின்றனர். காலத்திற்கேற்ப நூலகங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் வரவில்லை.

உள்ளாட்சி சொத்து வரியிலிருந்து பொதுமக்களிடம் நூலகத்துக்கான இரண்டு சதவீதம் வரி ஆண்டிற்கு இருநூறு கோடிக்கு மேல் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த வரிப்பணம் நூலகத்துறைக்கு முறையாக வந்து சேர்வதில்லை. பொது நூலகத்துறைக்கு என்று தனி இயக்குனர் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மட்டும் ஆண்டிற்கு நூறுகோடிக்கு மேல் செலவு செய்யப்படுவதால் மற்ற 4,600 நூலகங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஊர்ப்புற நூலகர்கள் முறையாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேரும்போது நாற்பது வயதை எட்டியவர்கள். இந்த நிலையில் பலர் அரசு ஊழியர்களுக்கான எந்த சலுகையும் பெறாமலேயே ஓய்வு பெறும் நிலைமை நீடிக்கிறது.

பள்ளிக் கல்வித்துறையில் இருக்கும் நூலகத் துறைக்கு பள்ளிக் கல்வித்துறையிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பது வேதனை. நூலகர்களுக்கு எம்.ஜி.ஆர். காலத்தில் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்று அலுவலக உதவியாளர் ஊதியம் கூட இல்லை. வாசிப்புதான் பல சமுதாய மாற்றத்திற்கு காரணமான நூலகத்தையும், நூலகரையும் அரசு சுமையாக கருதாமல் அறிவுப்புரட்சிக்கான ஆயுதம் என கருதினால் வளர்ச்சி நிச்சயம் என்பதில் ஐயமில்லை.

-கவுசல்யா, ஓமலூர் 

மேலும் செய்திகள்