காட்பாடியில் வடமாநில புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தாயின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள பணம் இல்லாததால் வடமாநில புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-09 23:30 GMT
காட்பாடி,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜெட்காயாதவ். இவருடைய மகள் அன்ஸிதேவி (வயது 22). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அகிலேஷ்குமாருக்கும் (23) கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. அகிலேஷ்குமார் காட்பாடி தாராபடவேட்டில் வாடகை வீட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் அகிலேஷ்குமார் தனது மனைவி அன்ஸிதேவியை காட்பாடிக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்றனர்.

இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அன்ஸிதேவியின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இதனை அறிந்த அன்ஸிதேவி, தாயின் இறுதிசடங்கில் கலந்துகொள்ள உடன் வேலை பார்த்தவர்களிடம் பணம் கடனாக கேட்டுள்ளார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கணவரிடமும் போதிய பணம் இல்லை. அதனால் அவர் இறுதிசடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் அன்ஸிதேவி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அகிலேஷ்குமார் காட்பாடி போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்ஸிதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்