100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்

100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2018-06-10 22:45 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே டி.மணல்மேட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குணசுந்தரி வரவேற் றார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சிம்சன் கலந்து கொண்டு மாநாட்டு தீபத்தை ஏற்றி வைத்தார். பின்னர் சுடர் தீபத்தை வாலிபர் சங்கத்தினர் திருக்கடையூர் பஸ் நிலையத்தில் இருந்து டி.மணல்மேடு வரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதனையடுத்து மாநாட்டு கொடியேற்றப்பட்டது. மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

டி.மணல்மேடு ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் உதவித்தொகையை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் டி.மணல்மேட்டில் கூடுதலாக அங்காடி திறக்க வேண்டும். நடுவலூர், நட்சத்திரமாலை, காடுவெட்டி, ரவணியன்கோட்டகம் ஆகிய கிராமங்களில் தனி அங்காடி அமைத்து தர வேண்டும். வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் அமுல்காஸ்ட்ரோ நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்