பண்ருட்டி அருகே பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 5 பேர் கைது

பண்ருட்டி அருகே ஓட்டலில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-10 22:00 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். இவருடைய மனைவி சாந்தி. இவர் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சிறிய அளவிலான ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அந்த ஓட்டலில், அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் முத்தமிழ் (வயது 20), ராஜேந்திரன் மகன் சரண்ராஜ் (27), சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார் (24), ஏழுமலை மகன் சத்தியராஜ் (25), பத்மநாபன் ஆகிய 5 பேரும் உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் அங்கிருந்து புறப்பட்டனர். இதனை பார்த்த சாந்தி, அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவர்கள் பணம் தர மறுத்து சாந்தியை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக தெரிகிறது. இதனை ஓட்டலில் வேலை செய்யும் ரங்கமணி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் 5 பேரும் சேர்ந்து தாக்கினர்.

மேலும் அவர்கள் ஓட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து சாந்தி மீது ஊற்றிவிட்டு தப்பி ஓடினர். இதில் காயமடைந்த சாந்தி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக கோதண்டராமன் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்தமிழ், சரண்ராஜ், சந்தோஷ்குமார், சத்தியராஜ், பத்மநாபன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்