வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

ஓட்டேரியில், தம்பியுடன் சீட்டு விளையாடியதால் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-06-11 22:15 GMT
திரு.வி.க நகர்,

சென்னை ஓட்டேரி போலேரி அம்மன் கோவில் தெரு அருகில் போதை ஆசாமி பீர் பாட்டிலால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர் மீரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது அதே பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் மகேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவரும் ஏகாம்பரம் மகன் தனசேகர் (35) என்பவரும் நண்பர்கள்.

இருவரும் அடிக்கடி பணம் வைத்து சீட்டு விளையாடி வந்துள்ளனர். இதனை அறிந்த தனசேகரின் அண்ணன் சுப்பிரமணி (43) இனிமேல் என் தம்பியுடன் (தனசேகர்) சீட்டு விளையாடக்கூடாது என மகேசை எச்சரித்துள்ளார். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் மகேஷ் மற்றும் தனசேகரும் தொடர்ந்து சீட்டு விளையாடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மகேஷ் நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலேரி அம்மன் கோவில் தெருவில் இருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் பீர் பாட்டிலுடன் வந்த சுப்பிரமணி பீர் பாட்டிலால் மகேஷின் தலையில் பின்பக்கமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுப்பிரமணியை நேற்று காலை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்