4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

குளச்சல் அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-11 23:15 GMT
குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள இலப்பவிளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குளச்சல் தெற்கு புத்தளம் பகுதியை சேர்ந்த பொன்ராஜதுரை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் 4-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்ற மாணவி, இதுபற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆசிரியரை கைது செய்யும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த குளச்சல் உதவி தொடக்க கல்வி அதிகாரி சந்திரமதி மற்றும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர் பென்சாம் ஆகியோர் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மாணவியின் பெற்றோர் கல்வி அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறினர். உடனே, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், இதுபற்றி புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பொன்ராஜதுரை மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்