நாகர்கோவில் வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நாகர்கோவில் வடசேரி சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் நேற்று அகற்றப்பட்டன.

Update: 2018-06-13 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தையில் 260 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதில் 245 கடைகள் ஏலம் விடப்பட்டு, காய்கறிகள், பழ வகைகள், மளிகை பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் கடைகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் இங்குள்ள சில கடைகளின் வெளியே சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து உள்ளதாக நகரசபை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் சரவணக்குமார் நேரில் சென்று வடசேரி சந்தையை பார்வையிட்டார். அப்போது ஆக்கிரமித்து கட்டியிருந்த கடைக்காரர்களில் ஒரு சிலர் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்ததாக கூறப்படுகிறது. எனவே நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.

நகராட்சி வருவாய் அதிகாரி குமார்சிங் தலைமையில் ஆய்வாளர்கள் சுப்பையன், இசக்கி சரவணன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கட்டியிருந்தனர். அவற்றில் இருந்து டேபிள், மேஜைகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் நகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய தலையில் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த ஒரு மரக்கட்டை ஒன்று தவறி விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே நகராட்சி ஊழியர்கள் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தலையில் 2 தையல் போடப்பட்டது. பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கும் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வடசேரி பஸ் நிலைய சாலையை விரிவாக்கம் செய்வதற்காக தமிழ்நாடு பொது வளாகங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம்- 1975-ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு தியேட்டரின் ஒரு புறத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்