‘லிப்ட்’ கேட்டு பயணம் செய்தபோது, லாரியிலிருந்து இறங்கிய தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலி

லிப்ட் கேட்டு லாரியில் பயணம் செய்த கூலித்தொழிலாளி இறங்க முயன்றபோது சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானர்.

Update: 2018-06-13 23:00 GMT
தூசி,

தூசி அருகே மேணலூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் கண்ணப்பன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். கண்ணப்பன் நேற்று காலை 7 மணிக்கு பல்லாவரம் கிராமத்திற்கு வேலைக்கு சென்றார்.

பின்னர் அவர் வீடு செல்ல முடிவு செய்து பல்லாவரம் சாலையில் பஸ்சுக்காக நின்றார். பஸ் வராததால் அவர் அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்றார். பின்னர் மேணலூர் கிராமத்திற்கு லாரி வந்ததும் டிரைவர் நிறுத்தினார். அதில் இருந்து கண்ணப்பன் இறங்கிக்கொண்டிருந்தார். அதற்குள் லாரி டிரைவர் லாரியை நகர்த்தியதாக கூறப்படுகிறது.

இதில் தடுமாறி விழுந்த கண்ணப்பன் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியதில் அவரது மீது லாரி ஏறி நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணப்பனின் உடலை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கண்ணப்பனின் மருமகன் சுரேஷ் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்