கோவில்பட்டியில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை திருடியவர் கைது

கோவில்பட்டியில் பட்டப் பகலில் நர்ஸ் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-14 20:30 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் பட்டப் பகலில் நர்ஸ் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

நர்ஸ் வீட்டில் நகை திருட்டு

கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அங்காள செல்வி (வயது 35). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் கணவன்– மனைவி 2 பேரும் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர் பட்டப் பகலில் நைசாக அய்யாத்துரை வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றார்.

தொழிலாளி கைது

பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த அய்யாத்துரை, அங்காள செல்வி ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் நகை திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் (55), அய்யாத்துரை வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகையை திருடியது தெரிய வந்தது. எனவே கணேசனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்