தொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல்

தொடர் மழையால் கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-06-14 22:45 GMT
கூடலூர்,

கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் மைசூரு, கூடலூர், கேரளாவை இணைக்கும் சாலையாக விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சரக்கு லாரிகள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கூடலூர், தேவர்சோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவை பெற சுல்தான்பத்தேரிக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சிலதினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் புஷ்பகிரி என்ற பகுதி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மழை தீவிரமாக பெய்து வருவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நாளுக்குநாள் சேதம் அதிகமாகி வருவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது சாலையின் பாதி அளவு உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க சாலையோரம் நெடுஞ்சாலைத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தடுப்பு கம்பிகளை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலையில் முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருமுனையில் வாகனங்கள் வந்து சென்ற பின்னரே எதிர்முனையில் உள்ள வாகனங்கள் செல்ல முடிகிறது. தொடர்ந்து கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை சீரமைப்பு பணியும் நடைபெற வில்லை. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்கு ஆளாகும் நிலை காணப்படு கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்