புளியமரத்தில் கார் மோதல்; ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உள்பட 4 பேர் பலி

சின்னதாராபுரம் அருகே புளியமரத்தில் கார் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-06-14 23:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவருடைய முதல் மனைவி கிரேசி ஜெயலட்சுமி(55), 2-வது மனைவி சுப்புலட்சுமி(53), டிரைவர் முனியாண்டி(65). இவர்கள் 4 பேரும் தாந்தோன்றிமலையில் இருந்து ஒரு காரில் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந் தனர்.

கார் கரூர்-தாராபுரம் சாலையில் சின்னதாராபுரம் அருகே உள்ள நேருநகர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

இதில் செல்வராஜூம், முனியாண்டியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்த கிரேசி ஜெயலட்சுமியையும், சுப்புலட்சுமியையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் உயிரிழந் தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், சின்னதாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான செல்வராஜ், முனியாண்டி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேசி ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகிய 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பலியான செல்வராஜ் கிராமப்புற வளர்ச்சி துறை இணை இயக்குனராகவும், முனியாண்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார் டிரைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்