அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் குறைக்கப்படுமா? - ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை குறைக்கவும், முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2018-06-14 23:15 GMT
விருதுநகர்,

மத்திய ரெயில்வே அமைச்சகம் முக்கிய நகரங்களுக்கு இடையே முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கி வருகின்றது. ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்த ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே ரெயில்வே அமைச்சகத்தின் நோக்கம் ஆகும்.

இதன்படி தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 8-ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12½ மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மாலை 3½ மணி அளவில் நெல்லை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மாலை 5½ மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணி அளவில் தாம்பரம் சென்றடைகிறது.

முன்பதிவு இல்லாத 18 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரெயில் முக்கிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை. மதுரை-நெல்லை இடையே விருதுநகரில் மட்டும் நிறுத்தப்படுகிறது. திருமங்கலம், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதில்லை.

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ரூ.240 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருதுநகரில் இருந்து ரூ.210-ம், மதுரையில் இருந்து ரூ.200-ம், திண்டுக்கல்லில் இருந்து ரூ.185-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக வரும் இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக நெல்லை செல்கிறது. எனவே தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு இந்த ரெயில் பயனுள்ளதாக அமையும்.

நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 12 மணி நேரம் முதல் 13 மணி நேரத்தில் சென்னை எழும்பூர் சென்றடையும் நிலையில் இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை-தாம்பரம் இடையே பயணநேரமாக 16 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதிலும் குறிப்பாக மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விருதுநகரில் இருந்து நெல்லைக்கு 2 மணி நேரத்துக்குள் சென்று விடும் நிலையில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் விருது நகரில் இருந்து நெல்லை செல்வதற்கு 3 மணி நேரம் ஆகிறது. அதிலும் விருதுநகர்-நெல்லை இடையே உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நிறுத்தப்படுவது இல்லை.

எனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம் இந்த ரெயிலின் பயண நேரத்தை குறைக்கவும், தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுத்தால் தான் இந்த ரெயில் விடப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறுவதுடன் தென்மாவட்ட மக்களும் பயன் அடையும் நிலை ஏற்படும்.

எனவே ரெயில்வே நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு ஏற்கனவே நிறுத்தப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலையும் தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும் ரெயில் நிலையங்களில் தாம்பரம்-நெல்லை இடையேயான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருவது குறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிட வேண்டியதும் அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்