கேரம் விளையாட்டில் முன்விரோதம் அரிவாளால் வெட்டப்பட்ட வாலிபர் சாவு, 7 பேர் கைது

கேரம் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அரிவாளால் வெட்டப்பட்ட தனியார் கார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-17 22:45 GMT
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சர்மாநகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 23). இவர், மாதவரத்தில் உள்ள கார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருடைய அண்ணன் அருண்குமார்(28). அம்பத்தூரில் வசித்து வரும் இவர், அங்கேயே கடை நடத்தி வருகிறார். அடிக்கடி வியாசர்பாடி வரும் அருண்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து தெருவில் கேரம் விளையாடுவது வழக்கம்.

அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிஷோர்குமார்(24) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். இந்த முன்விரோதம் காரணமாக, கிஷோர்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 10-ந்தேதி இரவு மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கிஷோர்குமார், அவருடைய நண்பர்களான வியாசர்பாடியைச் சேர்ந்த அசோக்குமார்(19), விஜயகுமார்(21), அய்யப்பன்(19), கலைவாணன்(20), அருண்பாண்டியன்(22), அப்பு(21) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்