மாமல்லபுரம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பலி

மாமல்லபுரம் அருகே கடலில் மீன் பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-27 00:05 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 52). மீனவர். இவர் நேற்று கொக்கிலமேடு பகுதி மீனவர்கள் 3 பேருடன் ஒரு படகில் சென்று கடலில் வலை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது மீன்கள் வலையில் சிக்கி கொண்டதால் வீராசாமி வலையை இழுக்க முயன்றார்.

அப்போது அவர் கடலில் தவறி விழுந்தார். உடன் இருந்த சக மீனவர்கள் கடலில் குதித்து அவரை அதே படகில் கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் உடனடியாக அவரை மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த வீராசாமிக்கு கலைவாணி என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடலில் இறந்த சம்பவம் கொக்கிலமேடு மீனவர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மீனவர் நடுக்கடலில் இறந்த சம்பவம் குறித்து நீலாங்கரை மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்