தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2018-07-05 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர்கள் பிரதாப்குமார், செல்வராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர்கள் கூறியதாவது:-

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 2-ம் கட்ட மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கும் எடுத்து கூறப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 15-ன் கீழ் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமகனாக உள்ள அனைத்து தரப்பு மக்களும் அரசின் தகவல்களை பெறும் உரிமை உள்ளது.


வெளிப்படையான நிலை செயலாற்றுபவர்களுடைய பொறுப்புடமைகளை மேம்படுத்துதல் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலர்களும் தங்கள் பணிகளில் ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளை கொண்டிருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை பெறுவது அவர்களது கடமையாகும். இந்த சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பதாரர் அந்த தகவல் பற்றிய விவரங்களையும் அவரை தொடர்பு கொள்வதற்கான முகவரியை தவிர வேறு விவரங்கள் எதையும் அளிக்க தேவையில்லை. முதல் தகவல் அளிக்கும் அலுவலர்கள் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும் முறையான தகவல் விதிகளை பின்பற்றி காலதாமதமின்றி தகவல்களை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரத்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேல், அலுவலக மேலாளர்கள் கணேசன், பாபு மற்றும் பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்