தூத்துக்குடியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புதிய பஸ்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-06 22:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புதிய பஸ்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்கள் தொடக்க விழா தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மண்டலத்துக்கு...

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பில் 515 புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கி உள்ளார். அதன்படி தூத்துக்குடி மண்டலத்துக்கு 15 பஸ்கள் வந்து உள்ளன’ என்றார்.

விழாவில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மணி, துணை மேலாளர் சுப்பிரமணியன், பிரிவு மேலாளர்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், ரமேசன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்