மாற்றுத்திறனாளி மகனை கொலை: தானும் தூக்குப்போட்டு தற்கொலை

விருதுநகரில் மாற்றுத்திறனாளி மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தந்தை, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-06 22:30 GMT
விருதுநகர், 

விருதுநகர் பாண்டியன்நகர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் தச்சுபட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களின் மகன்கள் செல்வேந்திரன் (27), சுரேஷ் கண்ணன் (25), ராகுல் (21). இதில் ராகுலை தவிர மற்ற 2 பேரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர்.

ராகுல் கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். அவரால் பேசவும் முடியாது. இவரை முருகன் மிகுந்த பாசத்துடன் பராமரித்து வந்தார். தினசரி இரவு தூங்கும்போது மகனை தனது அருகிலேயே படுக்கவைத்துக்கொள்வாராம். ராகுலின் நிலை கண்டு முருகன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முருகன் நேற்று அதிகாலை தனது அருகில் படுத்து தூங்கிகொண்டு இருந்த ராகுலை, தூக்கி சென்று வீட்டின் முன்புறம் இருந்த 7 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிபோட்டார். அதில் ராகுல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். பாசமுடன் வளர்த்த மகனை கொன்று விட்ட வேதனையில், முருகன் வீட்டில் உள்ள அறையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் கண்விழித்த பாக்கியலட்சுமி கணவரும், மகன் ராகுலும் படுத்து இருந்த இடத்தில் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து அறைக்கு சென்று பார்த்த போது, முருகன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மகனை தேடி பதற்றத்துடன் வெளியே வந்து பார்த்த போது, தண்ணீர் தொட்டியில் ராகுலின் உடல் மிதந்து கொண்டு இருப்பதை கண்டு துடி, துடித்து அக்கம்-பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

இது பற்றி பாண்டியன்நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தந்தை, மகன் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்