ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-06 22:45 GMT
சென்னை, 

காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியட் சீசர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை போலீசார் மறித்தனர். இதையடுத்து காரில் இருந்து கார் டிரைவரும், உடன் வந்த நபரும் தப்பி ஓட முயன்றனர்.

செம்மரக்கட்டைகள்

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சந்திரசேகரன் ஓடி சென்று காரின் சாவியை எடுத்து காரை பாதுகாப்பாக நிறுத்தினார். இதில் சந்திரசேகரனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

அந்த காரில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

கைது

அங்கிருந்த மற்ற போலீசார், தப்பி ஓட முயன்ற 2 நபர்களையும் மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் ஆந்திர மாநிலம் காளகஸ்தியை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 28), அவருடன் வந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பாலசந்திரா (30) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

காரில் மொத்தம் 250 கிலோ எடை கொண்ட 30 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்