ஆட்டுக்குட்டியை பிடிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு

ஆட்டுக்குட்டியை பிடிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2018-07-06 23:28 GMT
கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே பொன்னம்மாள்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ். விவசாயி. அவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 25). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் ஆத்துகாடு அருகே உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்தில் பேச்சியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி அங்குள்ள கிணறு நோக்கி ஓடியது. இதையடுத்து பேச்சியம்மாள் ஆட்டுக்குட்டியை பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டுக்குட்டியுடன் பேச்சியம்மாள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியுடன் பேச்சியம்மாளை மீட்டனர். இருப்பினும் கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்த பேச்சியம்மாளை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேச்சியம்மாளுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்